தூக்கம் என்பது மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய காரணியாக உள்ளது. தூக்கம் உயிர்களின் புத்துணர்ச்சியாகும் என்றும் சொல்லலாம். எனினும் அளவான தூக்கம் உற்சாகத்தை தரும். அதிக தூக்கம் மனிதனை சோம்பேறித்தனமாக்கும். அதேபோன்று அதிகமான அல்லது குறைவான தூக்கம் பல நோய்களையும் ஏற்படுத்தும்.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்கலாம். தூக்கமின்மை, நீண்ட நேரம் தூக்கம் வராமல் விழித்திருப்பது அல்லது தேவையான அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இது நோய்களுக்கான ஒரு மருத்துவ அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
தூக்கமின்மை (Insomnia) என்பது ஒரு நோயின் அறிகுறி. தூக்கமின்மையால் மறதி, மனச்சோர்வு, பேச்சு, செயல்பாடுகளில் எரிச்சல், இருதய நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.
தூக்கமின்மைக்கு பின்னால் மருத்துவ காரணங்களும், மனநல காரணங்களும் இருக்கலாம். தூக்கமின்மை, ஆண்களைவிட பெண்களிடத்தில் அதிகம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனினும் ஒருவருக்கு தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால் அவர் மருத்துவரை நாடுவதே சிறந்த வழி.