வி.சுகிர்தகுமார்
இலங்கையில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஜந்தடி உயர கற்சிலை அமைந்துள்ள அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் யாக பூஜையும் சங்காபிசேகமும் ஸ்ரீ ராமநவமி விசேட பூஜைகளும் நேற்று(21) நடைபெற்றது.
இப் பெருமைமிகு ஆலயத்தின் ஸ்ரீ ராம நவமி இம்மாதம் 12ஆம் திகதி ஸ்நாபினாபிசேகத்துடன் ஆரம்பமாகி நேற்று(21) ஆம் திகதி வருசாபிஷேக தின அஸ்டோத்திர(108) கலச சங்காபிஷேக கிரியைகளுடனும் அன்னதான நிகழ்வுடனும் நிகழ்வுற்றது.
இன்று காலை குருபூஜையுடன் ஆரம்பமான ஸ்ரீ ராமநவமி விசேட பூஜையில் யாகபூஜை நடைபெற்றது. இப்பூஜையில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு யாகத்தில் ஆகுதிகளை இட்டு தமது வேண்டுதலை நிறைவு செய்தனர்.
தொடர்ந்து யாகபூஜையில் வைக்கப்பட்ட பிரதான கும்பம் வெளிவீதி உலா நடைபெற்றதுடன் சங்காபிசேகமும் இடம்பெற்றதுடன் பிரதான கும்பம் ஆஞ்சநேயர் மீது சொரியப்பட்டு பூஜைகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்த எம்பெருமானுடைய வெளிவீதி உலா நடைபெற்று அடியவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் ஆசிர்வாதத்தோடு ராம்ஜி சுவாமிகளின் வழிகாட்டலில் ஆலய தலைவர் நல்லதம்பி கந்தசாமி தலைமையில் நடைபெற்ற கிரியைகள் யாவற்றையும் கிரியாகலாநிதி சிவஸ்ரீ கணேச லோகநாதக்குருக்கள் மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ த.குகனேஸ்வர சர்மா ஆகியோர் நடாத்தி வைத்தனர்.