அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடற்பருமன் கூடியவர்கள், நோயாளர்கள் ஆகியோர் தொடர்பாக அதிகூடிய கவனம் தேவை எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘உஷ்ண நிலையை குறைப்பதற்காக அதிக தண்ணீரைப் பருக வேண்டும்.
அனைத்து வயதைச் சேர்ந்தவர்களும் தமது உடலால் தாங்கிக்கொள்ளக்கூடிய உடல் உழைப்பை மட்டுமே முன்னெடுக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் மாலை நேரங்களில் நிழலான இடங்களில் உடற்பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் அடிக்கடி உடற்பயிற்சி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளையும் சிறுவர்களையும் வெட்டவெளியில் விளையாட அனுமதிக்கக்கூடாது. அவர்களை குளிரூட்டப்பட்ட அறையில் அல்லது மின்விசிறியின் கீழ் இருக்கச் செய்ய வேண்டும்.
பருத்தியிலான ஆடைகளை அணியும் அதேநேரம் குறைவான ஆடைகளையே அணிய வேண்டும். நேரடி வெயிலுக்குச் செல்லும்போது தொப்பி அல்லது குடையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
சூடான பானங்களையும் உணவுகளையும் தவிர்க்கும் அதேநேரம் அதிக குளிர்ச்சியான இனிப்பான பானங்கள் அருந்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.