கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
2022 நம்பர் 21ஆம் திகதி திங்கட்கிழமை அல் பைத் அரங்கில் உலகக் கிண்ண முதல் போட்டி நடைபெறவுள்ளது.
இதன் குழு நிலை போட்டிகள் ஒரு நாளைக்கு நான்கு போட்டிகள் என்ற ரீதியில் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டிகள் எட்டு மைதானங்களில் நடைபெறும். குழுநிலை போட்டிகள் மூன்று மணிநேர இடைவெளிகளில் ஆரம்பமாகவுள்ளன.
இதனைத் தொடர்ந்து போட்டிகள் நேரடியாக 16 அணிகள் சுற்றுக்குச் செல்லும். ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகள் வீதம் இந்த சுற்றில் போட்டிகள் நடைபெறவிருப்பதோடு தொடர்ந்து இரண்டு நாள் ஓய்வு தினங்களுக்குப் பின்னர் காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். இந்த இரண்டு சுற்றுகளும் இரண்டு நாட்கள் வீதம் நடைபெறும்.
வெளியேற்று சுற்றுப் போட்டிகள் கட்டார் நேரப்படி பி.ப. 6 மற்றும் இரவு 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. மூன்றாவது இடத்திற்கான போட்டி டிசம்பர் 17ஆம் திகதி கலீபா சர்வதேச அரங்கில் நடைபெறவுள்ளது. அடுத்த நாள் பி.ப. 6.00 மணிக்கு உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
போட்டிகள் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் டிசம்பர் 18ஆம் திகதி டோஹாவில் 80,000 பார்வையாளர்கள் அமரக் கூடிய லுசைலா அரங்கில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
22ஆவது அத்தியாயமாக நடைபெறும் கட்டார் கால்பந்து உலகக்கிண்ணம், மத்திய கிழக்கு நாடொன்றில் முதன்முறையாக நடைபெறும் முதல் உலகக்கிண்ண தொடராகும்.
கால்பந்து உலகக் கிண்ண தொடரானது வழக்கமாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் இல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அத்தோடு இத்தொடரின் மூலம் 32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக் கிண்ணத் தொடரை கட்டார் நடத்த தீர்மானித்துள்ளது.