முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரகாந்தனினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு நகரத்தில் பிரமாண்டமான நூலகம் அமைப்பதற்கான பணிகள் தற்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக்காக சுமார் 20 கோடி ரூபா நிதியை செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் 9 கோடி ரூபா செலவில் ஆரம்ப பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் இதன் அபிவிருத்தி பணிகள் தடைப்பட்டிருந்தது.
தற்பொழுது மீண்டும் இந்த கட்டிட பணிகளை பூர்த்தி செய்வதில் சந்திரகாந்தன் பெரும் முயற்சி எடுத்து செயற்பட்டு வருகின்றார். இவரது முயற்சியின் காரணமாக கரடியனாறு விவசாய பயிற்சி பண்ணை புனரமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று குடும்பிமலை பகுதிக்கு அருகில் உள்ள மாவெட்டுவான் அணைக்கட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கைவிடப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் மீண்டும் ஆரம்பித்ததை இட்டு பிரதேச மக்கள் அவரை பாராட்டியுள்ளனர்.