covid-19 தொற்றாளர்களாக நேற்றைய தினம் நாட்டில் இனங்காணப்பட்ட 400 பேரில் 371 பேர் நாட்டின் 18 மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவரக்ளில் கம்பஹா மாவட்டத்திலிருந்து 203 பேர் இனம் காணப்பட்டுள்ள நிலையில் வத்தளை மற்றும் ஹெந்தலை பிரதேசத்தை சேர்ந்த 54 பேர் அவர்களில் அடங்குகின்றனர்.
கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் 64 பேர் மற்றும் குறித்த மாவட்டத்தில் 103 பேர் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் நேற்றைய தினமும் 18 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் 17 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, காலி மாவட்டத்தில் மூன்று பேரும் இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பேரும் மற்றும் கண்டி, மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் (07) கொழும்பு நகர சபையை அண்மித்த பகுதிகளில் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு நகர சபையின் தொற்று நோய் நிபுணர் வைத்திய தினுகா குருகே தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தாதியர் நேற்றைய தினம் தொற்று உறுதிப்படுத்த வைத்தியருடன் ஒரே வார்டில் சேவை புரிந்தவர் என குறித்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இதுவரை 15 கொவிட் 19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டி.சந்திரராஜன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் புதிதாக 7 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்களை இவ்வாறு இனம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
குறித்த தொற்றாளர்களுக்கு இடையில் நான்கு மாத கைக் குழந்தையும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.