புவியின் துணைக்கோளான நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனா-ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது தொடா்பாக சீன தேசிய விண்வெளி நிா்வாக அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நிலவு தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சா்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க சீனாவும் ரஷியாவும் திட்டமிட்டுள்ளன. இது தொடா்பான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.
நிலவின் மேற்பரப்பிலோ சுற்றுவட்டப் பாதையிலோ இந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. நிலவு சாா்ந்த அனைத்து ஆய்வுகளையும் இங்கு மேற்கொள்ள முடியும். மற்ற நாடுகளும் இந்த ஆராய்ச்சி நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆராய்ச்சி நிலையத்தை அமைப்பது குறித்த ஆலோசனை, கட்டுமானம் உள்ளிட்டவற்றில் சீனாவும் ரஷியாவும் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படும். விண்வெளியை அமைதி சாா்ந்த விவகாரங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதியேற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், நிலவு ஆராய்ச்சி நிலையம் எந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல்களை சீனா வெளியிடவில்லை.
இரு சிறிய ரக விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களை சீனா ஏற்கெனவே விண்வெளிக்குச் செலுத்தி பரிசோதித்து வருகிறது. நிலவின் இருள்சூழ்ந்த பகுதியில் ஆய்வுக்கலனை சீனா நிலைநிறுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலனைத் தரையிறக்குவதற்கான முயற்சிகளிலும் சீனா ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், விண்வெளி சாா்ந்த திட்டத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு சீனாவும் ரஷியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.