தீப்பரவலுக்கு உள்ளான நியூ டயமண்ட் கப்பலின் தலைவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அவர் இன்றைய தினம் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்குக் கடலில் எரிந்துக்கொண்டிருந்த கப்பலைப் பாதுகாப்பாக மீட்பதற்கு இலங்கைக் கடற்படையினரும் கடற்பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான செலவீனங்களை கப்பலின் உரிமையாளர் ஈடு செய்ய வேண்டும் என்று இலங்கை அரசின் சார்பில் கோரப்பட்டிருந்தது.
இதன்படி, 340 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சட்டமா அதிபர் அந்தக் கப்பல் நிறுவனத்துக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.
இதற்கமைய அந்தத் தொகையைச் செலுத்துவதற்குக் கப்பலின் உரிமையாளர் இணங்கியுள்ளார் என்று அந்த நிறுவனத்தால் இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்கொண்டு 12 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.