சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிட்டதால், சுட்டுரை கணக்கு (டுவிட்டர்) நிரந்தரமாக முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில், எதிர்காலத்தில் சொந்த தளத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்
நாடாளுமன்ற கட்டட தாக்குதலின் போது, தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய ட்ரம்ப் தான் பேசிய காணொளிகளை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், ட்ரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த காணொளிளை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கினர்.
இந்நிலையில், ட்ரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும். மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என டுவிட்டர் தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.