2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட முன்மொழிவுக்கமைய, அமைச்சரவை தீர்மானத்தின்படி, சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 4 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3,500 ரூபாய் மானிய கொடுப்பனவு, தற்போது 4,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
02 அல்லது 03 உறுப்பினர்களைக் கொண்ட சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2,500 ரூபாய் மானிய கொடுப்பனவு, 3,200 ரூபாயாகவும் 1,500 ரூபாய் மானிய கொடுப்பனவு 1,900 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சமுர்த்தி மானிய கொடுப்பனவு, அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (12) முதல் வீடு வீடாகச் சென்று, சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக, அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் இன்று (09) தெரிவித்தார்.
இக்கொடுப்பனவு, பிரதேச செயலளார்களின் தலைமையில், சமுர்த்தி பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று, சமூர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலக பிரிவிலுள்ள சுமார் 43 சமுர்த்தி வங்கிகளின் ஊடாக 503 கிராம சேவகர் பிரிவுகளில் இக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதோடு, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 90 ஆயிரம் சமுர்த்தி நிவாரணம் பெறக்கூடிய குடும்பங்களுக்கு இந் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட மானியக் கொடுப்பனவை வழங்குவதற்கு அம்பாறை மாவட்டத்துக்கு 3,552 மில்லியன் ரூபாய் நிதி திறைசேரி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.