2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த தை மாதம் (25) அன்று வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்ததுடன், ஆலையடிவேம்பு கல்வி கோட்டம் வலயத்தில் முதலாம் இடத்தையும் பெற்றது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் நேற்றய தினம் (22) புதன்கிழமை ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் இருந்து 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய (40) அனைத்து மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவித்து ஊக்குவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.T.இந்திரன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக திருக்கோவில் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.S.சுரனுதன் அவர்களும், கௌரவ அதிதியாக பனங்காடு, பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி.S.குணாளினி அவர்களும், அதிதிகளாக பனங்காடு பிரதேசத்தினை சேர்ந்த பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. A.சந்திரபால,
பிரதி அதிபர் மேலும் பகுதி தலைவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் கமு/திகோ/பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு 40 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 09 மாணவர்கள் (143) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 38 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றார்கள்.
மேலும் குறித்த நிகழ்வில் பாடசாலைக்கு நீண்டநாள் தேவையாக இருந்த ஒலிப்பெட்டி (speaker) ஒன்றினை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களால் தன்னார்வமாக
45,000/- ரூபா பெறுமதியில் கொள்வனவு செய்து பாடசாலையின் அதிபரிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.