வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் நேற்று இணைந்து கொண்டது.
அம்பாரை மாவட்ட நவசிகல உறுமய கட்சியின் சார்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் தாமோதரம் ஜெயாகர் தலைமையிலான 10 வேட்பாளர்களும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மொட்டுக்கட்சியின் தலைமை வேட்பாளருமான விமலவீர திசாநாயக்க மற்றும் வேட்பாளர் வீரசிங்க ஆகியோர் முன்னிலையில் மொட்டுக்கட்சியுடன் இணைந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற மொட்டுக்கட்சியின் அலுவலக திறப்பு விழாவின் போதே நவசிகல உறுமய கட்சி உறுப்பினர்கள் மொட்கட்சியினருக்கு தமது பூரண ஆதரவை தெரிவித்து இணைந்து கொண்டனர்.
கோளாவில் பிரதேசத்திற்கு வருகை தந்த விமலவீர திசாநாயக்க மற்றும் வீரசிங்க ஆகியோரை நவசிகல உறுமய கட்சியினர் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து மொட்டு கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த விமலவீர திசாநாயக்க …. இத்தேர்தலில் மொட்டுக்கட்சி வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்ட நிலையில் நவசிகல உறுமய கட்சியினர் இணைந்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த தாமோதரம் ஜெயாகர் சுயநலத்துடன் பல கட்சிகளும் வேட்பாளர்களும் இயங்கிவரும் இந்நிலையில் அனைவரும் ஒன்று பட்டால் நாடு சிறப்பாக இருக்கும் எனும் அடிப்படையில் தாம் மொட்டுக்கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறினார்.
மேலும் நாட்டிற்கு சிறந்த ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார். ஆகவே அவருக்கு பொருத்தமான சிறந்த பாராளுமன்றம் அமைய வேண்டும். அப்போது நாடு சுபீட்சம் அடையும்.
ஆகவே சிறந்த முறையில் நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும் மொட்டுக்கட்சிக்கு தமது கட்சி பூரண ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டார்.