Latest News
Home / இலங்கை / 220 கோடிக்கும் அதிக பணம் வைப்பிலிடப்பட்ட ‘இடுகம’ பாதுகாப்பு நிதியத்தை மூடுவதற்கு தீர்மானம்

220 கோடிக்கும் அதிக பணம் வைப்பிலிடப்பட்ட ‘இடுகம’ பாதுகாப்பு நிதியத்தை மூடுவதற்கு தீர்மானம்

‘செய்கடமை’ (இடுகம) கொவிட் 19 – சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முடிவுக்குக் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய ‘கொவிட் 19- சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் பேரில் இலங்கை வங்கியில் பேணப்பட்டு வந்த 85737373 என்ற உத்தியோகபூர்வ கணக்கு 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதியின் பின்னர் செயற்படாது என சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் கலாநிதி.தாரக்க லியனபத்திரன தெரிவித்தார்.

எனவே அதில் பணம் வைப்பிலிட வேண்டாம் என்றும் இந்தக் கணக்கில் வைப்பிலிடுவதற்காக இனிமேலும் பணமோ, காசோலையோ அனுப்ப வேண்டாம் என்றும் நன்கொடையாளர்களிடம் அவர் கோரியுள்ளார்.

கொவிட் 19 பெருந்தொற்றின்போது, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுகாதார பாதுகாப்புப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக நன்கொடையாளர்கள் அளித்த ஒத்துழைப்பிற்கு சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் நிதிக்காக நன்கொடையாளர்களிடமிருந்து 220 கோடியே 71 இலட்சத்து 64 ஆயிரத்து 785 ரூபாய் 58 சதம் (ரூ. 2,207,164,785.58) கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஒக்டோபர் 18ஆம் திகதி கணக்கு மிகுதியின் பிரகாரம் கொவிட் நிதியில் 21 கோடியே 68 இலட்சத்து 77 ஆயிரத்து 431 ரூபாய் (ரூ. 216,877,431.05) எஞ்சியுள்ளதாகவும் இதனை ஜனாதிபதி நிதியில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மக்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக அந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *