வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் இலங்கை வங்கி கணக்கில் மோசடியான முறையில் பணம் பெறுதல் மற்றும் போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரிக்கும் மோசடி தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருலப்பனை பிரதேசத்தில் வைத்து குறித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் உள்ள பணியாளர்களுக்கு சிறிய வட்டியின் கீழ் கடன் வழங்குவதாக போலித் தகவல்களை வழங்கி அந்த பணியாளர்களின் வங்கி கணக்குகளின் தகவல் பெற்று பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது வங்கி கணக்கில் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் போலியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரம், அவற்றினை அச்சிடுவதற்கான பொருட்கள் பலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.