மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் (Batticalao Campus (PVT) Ltd) தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தயாரித்திருந்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
அத்துடன் மீண்டும் ஒருமுறை அமைச்சரவைக்கும் அனுப்பிவைப்பதற்கு துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்துள்ளது.
கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற குழு அறையில் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்த போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்து துறைசார் மேற்பார்வைக்குழு 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கை அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கும் அனுப்பப்பட்டது.
நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நிறுவனத்துக்கு நிதி கிடைக்கப்பெற்றமை, சட்ட பூர்வமற்ற நிர்மாணிப்புகள் மற்றும் பலவந்தமாக அரச காணியினை சுவீகரித்துக்கொள்ளுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் சட்ட விரோதமான அடிப்படையில் நிகழ்ந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அவசர கால சட்டத்தின் கீழ் குறித்த நிறுவனத்தை சுவீகரித்துக்கொள்வதற்கும் தவறிழைத்த அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராக துரித நடவக்கை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு தனது அறிக்கையில் அப்போது பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.