பல காரணங்களின் அடிப்படையில் புதிதாக பிறந்த அல்லது ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளை பெற்றோர் வெளியிடங்களில் கைவிட்டு செல்வதை தடுக்கும் வகையில் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு கைவிடப்படும் பிள்ளைகளை பொறுப்பேற்பதற்காக 9 மாகாணங்களில் உள்ள பிரதான 9 வைத்தியசாலைகளில் நிலையங்களை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை துரிதமாக விசாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தாமதமின்றி கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை புதுப்பிக்கவும் முகாமைத்துவம் செய்யவும் டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.