அம்பாறை மாவட்ட இந்து கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருமூலர் திருவிழா எனும் தலைப்பின் கீழ் திருமூலர் சிலை சைவத்தமிழ் எழுச்சி ஊர்வலமாக அம்பாறை மாவட்ட தமிழ் கிராம ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் கொண்டு செல்லும் நிகழ்வு இன்று (22) ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று சுவாமி விபுலாந்த சிறுவர் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஊர்வலமானது இன்று ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள், தம்பிலுவில் பிரதேச பாடசாலைகள் மற்றும் திருக்கோவில் பிரதேச பாடசாலைகளை சென்று மாணவர்கள் மத்தில் திருமூலர் அவர்களின் சிறப்புக்களையும் புகழையும் கொண்டு சேர்க்கும் வண்ணமாக சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஆன்மிகம் சார்ந்த சைவ பெரியார்கள், பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட திருமூலர் பெருமானின் சிலையானது சூரிச்சி அருள் மிகு சிவன் ஆலயத்தினுடைய சைவ தமிழ் சங்கத்தினுடைய நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்டதுடன். குறித்த சிலையானது அம்பாறை மாவட்டத்தின் சைவத்தமிழ் எழுச்சி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நிறைவில் கல்முனை அருள் மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்தில் கும்பாவிஷேகம் செய்யப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.