Latest News
Home / இலங்கை / கோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.

கோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது ஹம்பாந்தோட்டை – மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட விதம், குறித்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் ஊடாக சட்ட விரோத செயலொன்றினை புரிந்தமை மற்றும் தற்போது இலங்கை கடவுச் சீட்டொன்றினை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி. கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்ர குப்த தேனுவர, காமினி வெயங்கொட ஆகியோர் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு முன்வைத்த எழுத்து மூல முறைப்படடுக்கு அமைவாக, குடிவரவு குடியகல்வு, குடியுரிமைச் சட்டம் மற்றும் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாக நேற்று நீதிவானுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்ர குப்த தேனுவர, காமினி வெயங்கொட ஆகியோர் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இந்த விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளை கையளித்த நிலையில், அது தொடர்பில் முதலில் விசாரிக்கும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன, குறித்த விசாரணைகள் மிக ஆழமானது என்பதைக் காரணம் காட்டி அவற்றை சி.ஐ.டி.க்கு வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்தே இந்த முறைப்பாடுகளை விசாரிக்கும் பொறுப்பு சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டது.

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *