Latest News
Home / இலங்கை / இலங்கை தமிழர்களுக்கு உணவு தானியங்கள்!

இலங்கை தமிழர்களுக்கு உணவு தானியங்கள்!

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப விரைவில் உரிய வசதி செய்துதர வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியினால், அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கைத் தமிழர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக கடந்த 22.03.2022 அன்று 16 நபர்கள் (கைக்குழந்தை உட்பட) கடல் மார்க்கமாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் அவ்வாறு வரும் இலங்கை தமிழர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சொந்த நாட்டில் வாழ முடியாமல் தங்களுடைய வாழ்வை இழந்து, இந்தியாவிற்குள் அடைக்கலம் தேடி வரும் இலங்கைத் தமிழர்களை சக மனிதர்களாகக் கருதி, அவர்களை அரவணைக்க வேண்டியது நம்முடைய கடமை என்றும், தற்போது இலங்கையிலுள்ள அசாதாரண சூழ்நிலையில், இந்தியாவிற்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கும், ஏற்கெனவே தமிழக முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று, தற்காலிகப் புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை (Special Provisions to give temporary asylum) வழங்கிட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 01.04.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

அக்கடிதத்தில், கடந்த 31-3-2022 அன்று இந்தியப் பிரதமரை தான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ​​இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 7-4-2022 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருடனான தமது தொலைபேசி உரையாடலின்போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதை தான் தெரிவித்த போது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்து, அதற்குப் பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கலாம் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருவோருக்கும் பொருட்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியோடு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதோடு, இலங்கையில் நிலவும் இத்தகைய மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை உடனடியாக செய்து தருமாறும் முதல்வர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளார்.

நாளது தேதிவரை 13 குடும்பங்களைச் சார்ந்த 39 இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தமிழ்நாடு வந்துள்ளனர், இவர்களில் 11 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 17 குழந்தைகள் உள்ளார்கள்.

அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, 19,223 இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சார்ந்த 58,547 நபர்கள் இராமநாதபுரம் மற்றும் திருச்சி உட்பட தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தங்குமிடம், குடிநீர் வசதி, மின்சார வசதி, ஒவ்வொரு மாதமும் கருணைத் தொகை, குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் கல்வி உதவித் தொகை, அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குதல், மானிய விலையில் ஓராண்டுக்கு ஐந்து எரிவாயு உருளைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் கானொலி காட்சி வாயிலாக அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களது அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்தும் விசாரித்தார்.

இந்நிகழ்வில். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், செஞ்சி. கே. எஸ். மஸ்தான் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, அவர்களும் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் டி. ஐகந்தாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *