Latest News
Home / இலங்கை / இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் ஐ.நா நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தளபதியின் நியமனம் குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுச் சென்று, போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது.

இந்த நியமனம் நாம் சர்வதேசத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் தமிழ் மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துள்ளது. இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்திற்கு எதிரான போர்பிரகடனத்தை கொண்டு வரும் ஓர் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐ.நா.அலுவலகம் தொடக்கம் பல விசாரணைகள் இடம்பெற்றிருந்தன அவ்வாறு இடம்பெற்றிருந்த விசாரணைகள் அனைத்திலும் போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டார் என இனங்காணப்பட்ட சவேந்திர சில்வாவிற்கு மைத்திரி, ரணில் அரசு இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது.

இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *