சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி என குருணாகல் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
அமைச்சர் அஷோக அபேசிங்கவினால் குருணாகல் மாவட்டத்தின் சத்தியவாதி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரமேதாசவை வரவேற்கும் பொது மக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று மாலை 4 மணியளவில் இக்கூட்டம் ஆரம்பமாகியிருந்தது. கூட்டத் திடலுக்கு 5.30 மணியளவிலேயே அமைச்சர் சஜித் வந்திருந்தார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்துடனான பதாதைகளை ஏந்தியவாறு ‘அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச’ என்று கோஷம் எழுப்பினர்.
கூட்டத்தில் பங்குபற்றியிருந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் சஜித் பிரேமதாசவின் உரையைத் தொடர்ந்து கூட்டம் நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா , உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துலவல, அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான துஷார இந்துநில், இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பதுளை மற்றும் மாத்தளையில் இதேபோன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் கலந்துகொண்டிருந்த முக்கிய உறுப்பினர்களான அமைச்சர் மங்கள சமரவீர, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.