அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 7ம் நாள் திருவிழாவான வேட்டை திருவிழா நேற்று (28) பக்தி பூர்வமாக பக்த அடியார்கள் சூழ சிறந்த முறையில் இடம்பெற்றது.
இலங்கைத்திருநாட்டின் கிழக்கே தென்பால் செந்நெல்விளைகின்ற செழிப்பான வயல் நிலங்களும் சைவநெறி நின்று தமிழ் வளர்க்கும் மக்களும் வாழும் சைவப்பழம்பெரும் அழகு நிறை அக்கரைப்பற்றில் மருதடி நிழலில் வீற்றிருந்து அடியவர்கள் இன்னல் களைந்து பேரருள் மழைபொழியும் விநாயகப்பெருமானின் இவ்வருட மகோற்சவம் கடந்த 22ஆம் இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து இடம்பெற்ற கிரியைகளுடன் 31ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவம் அன்று மாலை நடைபெறும் கொடியிறக்கல் திருவிழாவுடனும் 01ஆம் திகதி இடம்பெறும் பூங்காவனத்திருவிழா, திருப்பொன்னூஞ்சல் 02ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன் நிறைவுறுகின்றது.
ஆலய மகோற்சவ பெருவிழா தலைவர் க.புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெறுவதுடன் கிரியைகள் யாவும் வித்யாசாகரர் வாமதேவ சிவாச்சார்யார் சிவஸ்ரீ புண்ய கிருஸ்குமார் குருக்கள் மற்றும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ. க.கஜமுகசர்மா குருக்கள் தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைக்கின்றனர்.