நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயத்திணைக்களம் பல்வேறு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு நிலையம் ஊடாக சௌபாக்கியா செயற்றிட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக நிலக்கடலை வழங்கப்பட்டதுடன் அதன் அறுவடை நிகழ்வையும் நடாத்தியது.
நிலையத்தின் பொறுப்பதிகாரி விவசாயப்போதனாசிரியர் எம்.எஸ்.எம்.நிப்றாஸ் தலைமையில் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற அறுவடை நிகழ்வில் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் மற்றும் தம்பிலுவில் வலய உதவி விவசாயப்பணிப்பாளர் எஸ்.தேவராணி, சிரேஷ்ட பாடவிதான உத்தியோகத்தர் ஏ.ஜ.ஏ.பெரோஸ், விவசாயப்போதானாசிரியர் எஸ்.நர்மதன் விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தர் ரி.ஏ.தக்ஷிலா பிரியதர்சினி உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நிலக்கடலை அறுவடையினை உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து சம்பிராதயபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் இலவசமாக விதைப்பொதிகளையும் வழங்கி வைத்தனர்.
இதன் பின்னராக சௌபாக்கியா செயற்றிட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் மற்றும் செயற்றிட்டம் தொடர்பில் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் விவசாயிகள் மத்தியில் விளக்கமளித்தார்.