அம்பாறையில் பாடசாலை மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த சம்பவத்தில் கைதான வைத்தியர் அம்பாறை நீதிமன்ற நீதவான் அசாங்கா கிட்டியாவத்த முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அம்பாறை – உஹண கோணாகொல்ல பகுதியில் உள்ள சேனரத்புர பிராந்திய வைத்தியசாலையில் கடமையாற்றும் குறித்த வைத்தியரிடம் உஹண பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றின் மாணவிகள் நால்வர் இன்று இடம்பெறவிருந்த ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள சென்றுள்ளனர்.
இதன்போதே குறித்த மாணவிகளை வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவர்களிடம் இந்த விடயத்தை தெரிவித்த நிலையில், சம்பவம் வகுப்பாசிரியரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் முறைப்பாடு வழங்கியதையடுத்து பொலிஸார் குறித்த வைத்தியரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவிகள் வைத்திய பரிசோதனைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட வைத்தியரை எதிர்த்து அப்பகுதியில் வசிப்பவர்கள் வைத்தியசாலையில் ஒன்றுகூடியமையினால் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.