சீனாவில் உருவாக்கப்பட்ட, ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த நிபந்தனையுடன் கூடிய அனுமதியை சீன அரசாங்கம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியான தகவலில், சீனாவின் முதல் ஏடி5-என்கோவ் கொரோனா தடுப்பூசி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்தத் தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனைகள் கடந்த ஆண்டு மார்ச் 16ஆம் திகதி தொடங்கியது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஜோன்ஸன் அண்ட் ஜோன்ஸன் நிறுவனம் தயாரித்துள்ள இதே போன்ற தடுப்பூசியின் போட்டியாளராக இந்தத் தடுப்பூசி கருதப்படுகிறது.
அத்துடன், சீனாவில் 5 கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சைனோவாக், சைனோஃபார்ம், கேன்சைனோபயோ ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளும், வூஹான் உயிரியியல் பொருள் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியும் இத்தகைய அனுமதியைப் பெற்றுள்ளன.