சர்ச்சைக்குரிய எல்லைப் பிராந்தியத்தில் இந்திய மற்றும் சீன படையினர் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த மோதல்களில் இருதரப்பு வீரர்களும் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் அறிவித்துள்ளன.
சிக்கிம் (Sikkim) மாநிலத்தின் வட பகுதியிலுள்ள எல்லைப்பகுதியில் 3 நாட்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது.
சிக்கிமில் உள்ள நாகு லா எனும் இடத்தில் இருநாட்டு இராணுவ வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக இந்திய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருநாட்டு இராணுவ வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதை இந்திய இராணுவம் உறுதி செய்துள்ளது.
இருப்பினும் இதுவொரு சிறிய சம்பவம் எனவும் அது தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் இந்திய இராணுவம் கூறியதாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.
உலகின் மிக நீளமான சர்ச்சைக்குரிய எல்லையில், தற்போது பதற்றங்கள் அதிகரித்த நிலையிலுள்ளன.
இருதரப்பும் குறித்த எல்லைப் பிராந்தியத்தின் பெரும்பகுதியை தமக்குரியது என உரிமை கோரி வருகின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கத்தில் இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
எனினும், தமது தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சீன இராணுவம் அறிக்கையிட்டிருக்கவில்லை.