Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்: விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு குறைவாகவுள்ளது பா.உ கலையரசன்

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்: விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு குறைவாகவுள்ளது பா.உ கலையரசன்


ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அபிவிருத்திக் குழுத் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி. வீரசிங்க தலைமையிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பாபகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலுடன் இடம்பெற்றது.

இதன்போது பிரதேச ரீதியிலான உத்தேசிக்கப்பட்ட பல்வேறு பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது விவசாய அமைப்பின் பிரதிநிதிகளால் கடந்த மூன்று வருடங்களாக முன்மொழியப்பட்ட நீர்ப்பாசன முன்மொழிவொன்று இதுவரையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமலிருப்பதாகவும், இதனால் மழைநீர் வீணாக முகத்துவாரத்தில் கலப்பதாகவும் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.

இதன் போது பாரளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விவசாய நீர்ப்பாசன, குடிநீர் போன்றன தொடர்பாக மக்கள் பெரும் புறக்கணிப்பினை அனுபவித்து வருகின்றனர். விவசாயிகளின் பிரச்சனைக்கான திட்டங்களை அவர்களின் முன்மொழிவினூடாக மேற்கொள்வதே சிறந்ததாகும். ஆனால் விவசாய அமைப்பினால் கொடுக்கப்பட்ட திட்ட முன்மொழிவு மூன்று வருடங்களுக்கு மேலாக பாராமுகமாக இருக்கின்றதென்பது நீர்ப்பாசன அதிகாரிகளுக்கும், பிரதேச விவசாயிகளும் இடையிலான தொடர்பு குறைவாக இருப்பதையே காட்டுகின்றது. இந்த நிலைமை மாற வேண்டும்.

அத்துடன் நீர்ப்பாசன நிலங்கள், வாய்க்கால்கள் பலரால் நிரப்பப்படுகின்றது. இதனால் வெள்ளம் ஏற்படுகின்ற போது மழைநீர் கிராமங்களுக்குள் வருகின்ற நிலைமை காணப்படுகின்றது. எனவே இவை தொடர்பிலும் நீர்ப்பாசன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் குறித்த விவசாய அமைப்பினரின் திட்ட முன்மொழிவு தொடர்பில் அபிவிருத்திக் குழுத்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக உரிய திட்ட முன்மொழிவுகளை பிரதேச செயலாளர் ஊடாக அபிவிருத்திக் குழுத் தலைவருக்கு வழங்குமாறும், அவர் நீர்ப்பாசனப் பணிப்பாளருடன் கலந்துரையாடி இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *