2021ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடரை நடத்தும் உரிமம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இணைய வழியுடாக நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் 2021ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடரை (ஒக்டோபர்-நவம்பர்) திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவது என்றும், ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான 7ஆவது ரி-20 உலகக்கிண்ண தொடரை 2022ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
12ஆவது பெண்களுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் (50 ஓவர்கள்) அடுத்த ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி முதல் மார்ச் 7ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடக்க இருந்தது.
கொவிட்-19 அபாயத்தால் இதற்கான தகுதி சுற்று முழுமை பெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த உலகக் கிண்ண தொடரையும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி வரை தள்ளிவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.