அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வங்கி ஒன்று, தங்களது வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் தவறுதலாக லட்சக்கணக்கான அமெரிக்க டொலர்கள் பணத்தை வைப்பிலிட்ட நிலையில், அதனை அவர்கள் முழுவதுமாக செலவு செய்துள்ளனர்.
ரொபர்ட் மற்றும் டிஃபானி வில்லியம்ஸ் ஜோடியின் வங்கி கணக்கில் 1,20,000 டொலர்கள் பணத்தை வங்கி தவறுதலாக வைப்பு செய்திருந்தது. அதில் அவர்கள் SUV கார், மற்றும் பிற பொருட்களை வாங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப்பணம் அவர்களுக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும், அவர்கள் அதனை செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர் செய்த தவறால் குறித்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சுமார் இரண்டரை வாரங்களுக்குள் US$100,000 ஐ செலவு செய்துவிட்டதால் அவர்கள் மீது தீவிர சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்பதியர், அந்தப் பணத்தைக் கொண்டு மூன்று வாகனங்கள் வாங்கியதுடன், பணம் தேவைப்பட்ட நண்பர்களுக்கு US$15,000 கொடுத்துள்ளனர்.
வங்கி அதன் தவறை சரிசெய்து சரியான கணக்குக்குப் பணத்தை அனுப்பிய பின்னர், கடந்த ஜூன் 20ஆம் திகதியளவில் தம்பதியருடன் தொடர்பு கொண்டது.
செலவழித்த பணம் முழுவதையும் திருப்பித் தருவது அவர்களது பொறுப்பு என டிஃபானியிடம் வங்கி தெரியப்படுத்தியது.
பணத்தைத் திருப்பிக்கொடுக்க தனது கணவருடன் சேர்ந்து ஏற்பாடு செய்வதாக வங்கியிடம் ஆரம்பத்தில் உறுதியளித்த டிஃபனியுடன் பின்னர் தொடர்புகொள்ள இயலாமல் போய்விட்டது என வில்லியம்ஸ்போர்ட் சன்-கெசட் இதழிடம் பொலிஸ் அதிகாரியான ஆரன் பிரவுன் தெரிவித்தார்.
அதன்பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலையான தம்பதி பிணை கோரியிருந்தனர். தவறுதலாகப் பணம் வைப்பிலிடப்படுவதற்குமுன் தம்பதியரின் வங்கிக் கணக்கில் US$1,121 டொலர் மாத்திரமே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.