ம.கிரிசாந்
திருக்கோவில் கல்வி வலய, ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் நேற்று இரவு (27.10.2022) பல ஆண்டுகள் பழமை வாய்ந்த நொச்சி இனத்தை சேர்ந்த பாரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்து பாடசாலையின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது.
குறித்த பாடசாலையில் முன் வாசலில் பல வருடங்களாக இருந்து வந்த நொச்சி மரத்தின் அடிப்பகுதி பலவீனம் அடைந்து பாதிப்படைந்தமையினால் நேற்று இரவு குறித்த மரமானது சாய்ந்து விழுந்ததன் காரணமாக அருகாமையில் காணப்பட்ட மாணவர்களின் வாகனத்தரிப்பிடம் (சைக்கிள்கள் தரித்து வைக்கும் இடம்) முற்றாக சாய்ந்து விழுந்துள்ளது மற்றும் பாடசாலை மதிலின் ஒரு சிறு பகுதிக்கும் சேதம் ஏற்படுத்தி வீதியில் சாய்ந்து விழுந்துள்ளது.
தற்போது பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் விழுந்த பாரிய நொச்சி மரத்தினை இயந்திரங்கள் கொண்டு துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்காக மற்றும் ஆசிரியர்களுக் காக இருந்துவந்த ஒரே ஒரு வாகனத்தரிப்பிடமும் முற்றாக சாய்து விழுந்து பயன்படுத்த முடியாததாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாகனங்களை திறந்த வெளிப்பகுதியில் தரித்து வைத்திருக்கின்றார்கள்.
இதன் காரணமாக ஒருசில வாகனங்கள் (துவிச்சக்கர வண்டிகள்) பாதிக்கப்பட்டு வீடு செல்லும் போது செலுத்த முடியாததாக நடந்தே செல்லவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
பாடசாலைக்கு என்று வாகன தரிப்பிடம் ஒன்றை மிகவிரைவில் அமைத்தே ஆகவேண்டும் என்ற தேவைப்பாடு காணப்படுகின்ற நிலையில். வாகன தரிப்பிடத்தை அமைப்பதற்கான செயற்பாடுகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினருக்கு சமூக ஆர்வம் கொண்டவர்கள், செல்வந்தர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் தங்களால் இயன்ற உதவிகளையும் பங்களிப்புக்களையும் வழங்கவேண்டிய தேவைப்பாடானது காணப்படுகின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.