-கிரிசாந் மகாதேவன்-
கொரோனாவின் மூன்றாம் அலை தீவிரம் அடைந்ததை அடுத்து இலங்கை அரசினால் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடுகள் அண்ணளவாக 20 நாட்களுக்கு மேலாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில்.
பலரும் தொழிலை இழந்து வீடுகளில் இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன் நிலை காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு வருமானத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வதாரத்தினை கருத்தில்கொண்டு அரசாங்கத்தினால் 5000 ரூபா கொடுப்பனவு கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் 5000 ரூபா கொடுப்பனவுகள் சமூர்த்தி வங்கிகள் ஊடக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் நன்கொடையாளர்களினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு நன்கொடையாளர்கள் உதவி செய்யவோ அல்லது அத்தியாவசியப் பொருட்களை வழங்கவோ விரும்பினால் அவர்களுக்கான அனுமதியானது சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வழங்கப்படலாம் என ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் காரணமாக 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மூலமாக 02 தொற்றாளர்கள் அடையலாம் காணப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொதுமக்கள் பொறுப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அரசு உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.