ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
ஏ.எவ்.பி செய்திசேவை நிறுவனம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இடம்பெற்ற திருமண விருந்தின் போது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் உயிரிழந்திருந்ததுடன், 182 பேர் காயமடைந்திருந்தனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட திருமண நிகழ்வின்போதே இந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.
குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலை தலிபான்கள் மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையிலேயே ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.