இலங்கை தமிழ் தம்பதியினரை அவர்களது குழந்தைகளுடன் இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என கோரி போரடி வரும் ஹோம் டு பைலோ அமைப்பு தனது டுவிட்டர் மற்றும் முகநூல்களில் இதனை தெரிவித்துள்ளது.
நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்- ஆதரவாளர்கள் விமானநிலையம் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு வயது மகள் தருணிகாவிற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராயுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அதிகாரிகள் ஆராய மறுத்துள்ள நிலையிலேயே தமிழ் குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் 2012 மற்றும் 2013 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நடசலிங்கமும் பிரியாவும் அங்கு திருமணம் செய்தனர். அவர்களிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நடேசலிங்கம் முன்னர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புவைத்திருந்தவர் என்பதால் அவர் இலங்கை திரும்பினால் சித்திரவதைகளிற்கு உள்ளாவார் என அவரது குடும்பத்தினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நடேஸ் பிரியா தம்பதியினரின் புகலிடக்கோரிக்கையை ஏற்கனவே நிராகரித்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களை கடந்த 17 மாதங்களாக குழந்தைகளுடன் மெல்பேர்னின் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.