வி.சுகிர்தகுமார்
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சிகையலங்கார நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா அச்சம் காரணமாக பல நாட்களாக மூடப்பட்டிருந்த சிகையலங்கார நிலையங்கள் காரணமாக அதில் தொழில்புரிந்து வரும் தொழிலாளர்களும் உரிமையாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று நோய் அச்சம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் குறைவடைந்துவருகின்றது. இதனை கருத்தில் கொண்ட பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான சுகாதார பிரிவினர் சில நிபந்தனைகளின் அடிப்படையில் சிகையலங்கார நிலையங்களை மீளவும் திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தினர்.
இதற்கமைவாக சிகையலங்கார நிலையங்களில் தொழில்புரிந்து வரும் தொழிலாளர்களையும் அதன் உரிமையாளர்களையும் அழைத்து கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில் இன்னும் ஓரிரு தினங்களில் சாத்தியப்படும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த நிலையங்களை திறப்பதற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அனுமதி வழங்கினார்.
மேலும் குறித்த நிலையங்களை திறப்பதற்கு முன்னர் களவிஜயத்தினை மேற்கொண்டு சிகை அலங்கார நிலையங்களின் நிலை தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன் குறைபாடுகளை நிவர்த்தி செய்ததன் பின்னர் அறிவுறுத்தல்களுக்கு அமைய நிலையங்கள் திறக்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.