பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது காணப்படும் கொரோனா சூழ்நிலையில் அவர்கள் அச்சுறுத்தல்களின் கீழ் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பலர் நீரிழிவு உள்ளிட்ட பல தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும், வயது முதிர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
சிறைச்சாலைகளில் உரிய மருத்துவ வசதிகள் இன்றியும், அவர்களை ஊக்குவிக்க எவரும் இன்றியும் மிருகங்கள் போன்று வாழ்ந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தற்போதைய நோய் சூழ்நிலையால் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என கஜேந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.