இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப்பந்த், உலகரங்கில் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை வெளிக்காட்டும் நேரம் தற்போது வந்துள்ளதாக, அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மூத்த வீரர் டோனியின் ஓய்வு மற்றும் எதிர்வரும் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, விக்கெட் காப்பாளர் இடத்திற்கு இளம் வீரர் ரிஷப் பந்த்தை கொண்டு வருவதற்கு இந்திய அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதற்காக அவருக்கு பல வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் அவர் அதனை கருதி விளையாடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில்,
“ரினிடாட்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நடைபெற்ற போட்டியில் அவர் ஷொட்டை பார்த்தீர்கள் என்றால், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அந்த ஷொட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இரண்டு மூன்று முறை அதேபோன்று முயற்சி செய்து ஆட்டமிழந்துள்ளார்.
உங்களது ஷொட் தெரிவுகள் அணியை தோல்வி நிலைக்கு கொண்டு செல்லும், உங்களை அது கீழ்நோக்கி கொண்டு செல்வதை மறந்து விடுகிறீர்கள் என்பது குறித்து வலியுறுத்தப்படும். ஒருமுனையில் விராட் கோஹ்லி நிலையாக நின்று கொண்டிருக்கும்போது, மறுமுனையில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 22.3 ஓவரில் 164 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்படி ஆட்டமிழக்கும்போது அணிக்கு பாதகமான நிலை ஏற்படுகிறது. உங்களுடைய இலக்கு களத்தில் நின்று போட்டியை சிறப்பாக முடித்து வைக்க சிறப்பு வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானது.
யாருமே தனது பாணியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், போட்டி தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியம். சில குறிப்பிட்ட தருணங்களில் ஷொட் தெரிவுகள் என்பது மிகவும் முக்கியமானது.
அதை ரிஷப் பந்த் புரிந்து கொள்ளாதவரை, அவரால் அதை தடுக்க முடியாது. இதை புரிந்து கொள்ள எத்தனை போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கேட்கிறீர்கள். அது ஒரு போட்டியாக இருக்கலாம், நான்கு போட்டியாக இருக்கலாம். அதை தாண்டி இருக்குமென நான் கருதவில்லை. அவர் கற்றுக் கொள்வார். அவர் போதுமான அளவிற்கு ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளார்.
இப்போது அவருக்கான நேரம் வந்துள்ளது. உலகரங்கில் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை அவர் வெளிக்காட்ட வேண்டும்’ என கூறியுள்ளார்.
21 வயதான ரிஷப் பந்த், இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளிலும், 12 ஒருநாள் மற்றும் 18 ரி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.