மோசமான இராணுவ தகவல் பரிமாற்றத்தினாலேயே, ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
176 பேரது உயிர்களை காவு வாங்கிய இந்த விமான விபத்து குறித்து விசாரித்து வரும் ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு, இராணுவ தொலைத்தொடர்பில் ஏற்பட்ட தவறே இந்த விபத்துக்கு காரணம் என்பதை ஒப்பு கொண்டுள்ளது.
இந்த விமானத்தின் ‘கருப்புப் பெட்டி’ தரவுகளை வெளியிடுவதை தாமதப்படுத்தி வரும் ஈரான், ஜூலை 20ஆம் திகதி அதனை ஆய்வுக்காக பிரான்ஸ் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி, ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் இன்டர்நேஷனல் ஏயார்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், விமான நிலையத்துக்கு 45 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கியது.
இதில், விமானத்திலிருந்த 176 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 82 பேர் ஈரானியர்கள் கனடா நாட்டைச் சேர்ந்த 63 பேர் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரானைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவர்.
இந்த விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறுதான் காரணம் என்று விபத்து நடந்த போது கூறி வந்த ஈரான், 3 நாட்களுக்குப் பிறகு, தவறுதலாக உக்ரேன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உண்மையை ஒப்புக் கொண்டு விசாரணையைத் தொடங்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கையில், ‘ஜனவரி 8ஆம் திகதி உள்ளூர் நேரப்படி 06:12 மணிக்கு (02:42 GMT) தெஹ்ரானின் இமாம் காமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர், உக்ரைன் விமானம் சுமார் 8,100 அடியில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் இழந்தது. வடக்கிலிருந்து, போயிங் 737-800 விமானத்தின் மீது இரண்டு டோர்-எம் 1 (தரை முதல் வான்வழி) ஏவுகணைகள் வீசப்பட்டன’ என தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய கடந்த 8ஆம் திகதி உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த விமானத்தின் மீது இரு டார்-எம்1 ரக ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிய வந்தது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போதே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அத்துடன், ஈரானுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென அமெரிக்காவும், கனடாவும் கோரி வருகின்றன.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.