ஈரானில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில், இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தன்னார்வ அமைப்பான அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
ஈரானில் சில வாரங்களுக்கு முன்னர் எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இதில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து அம்னெஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை ஈரான் அரசு கைது செய்துள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் 304 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக கூற எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
இதனால், கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஈரான், மானியம் முறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு காருக்கு மாதம் 60 லிட்டர் மட்டுமே வழங்கப்படும். அந்த அளவுக்கு மேல் வாங்கவேண்டுமானால் அதற்கு இருமடங்கு விலை தர வேண்டும். மேலும் இணையதள சேவைகளிலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
தற்போது ஈரானில் படிப்படியாக வன்முறை குறைந்து நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.