வி.சுகிர்தகுமார்
“உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்” எனும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு என்ற கொள்கைக்கு அமைய நாடு பூராகவும் கிராமத்திற்கு ஒரு வீடு எனும் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட 14022 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு தேசிய ரீதியில் இன்று நடைபெற்றது.
உற்பத்தி திறன் மிக்க ஒரு பிரஜை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழும் ஒரு குடும்பத்தை உருவாக்கும் நோக்கில் அம்பாரை மாவட்டத்திலும் கல்முனை நகர காரியாலயத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் இன்று கையளிக்கப்பட்டன.
கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டட பொருட்கள் நிறுவன மேம்பாட்டு அமைச்சர் இந்திக் அனுருத்தவின் நெறிப்படுத்தலின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையானது முன்னெடுத்த இவ்வீட்டுத்திட்டத்திற்கு தலா 6இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 15 வீடுகள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக வீடமைப்பு உத்தியோகத்தர் கு.சதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் மற்றும் அதிகார சபையின் மேலதிக மாவட்ட முகாமையாளர் ஏ.எம்.இப்றாகிம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வீடுகளை திறந்து வைத்தனர்.
இத்திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றுக்கொண்டு பொதுமக்கள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் வீடமைப்பு அதிகார சபைக்கும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட வீடமைப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
வீடில்லாமல் பலவருடகாலமாக வாழும் தமக்கு ஒரு வீட்டினை பெற்றுக்கொடுத்து வாழ்வில் ஒளியேற்றிய அரசாங்கத்திற்கு என்றும் விசுவாசமாக இருப்பதாகவும் கூறினர்.