வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய புனருத்தான திருத்தாபன எண்கழிம முப்பத்தாறு தத்துவத் தூண்கள் தாங்கும் பதினேழுகுண்ட பிரம்மசூத்திர பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கை முன்னிட்டதான பிரதேசத்தில் முதற்தடவையாக கலசம் தாங்கிய இரு யானைகள் ஊர்வலம் நேற்றும் இன்றும் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவின் ஆதிக்கோயிலாம் 2000 வருடங்கள் பழமையானதும் ஊர்ப்பிள்ளையார் பெரிய பிள்ளையார் கோயில் என சிறப்பு பெயர் கொண்டு விளங்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மஹா தேவஸ்தானம் எதிர்வரும் சித்திரை 02ஆம் திகதி அன்று 17 குண்ட மகா யாக கும்பாபிஷேகம் காண இருக்கிறது.
கர்மாரம்பமானது; 25ஆம் திகதி ஆரம்பமானதுடன்;
31 ஆம் நாள் மற்றும் சித்திரை 01ஆம் திகதிகளில் எண்ணெய்க்காப்பிடலும் 02 ஆம் திகதி கும்பாபிசேகமும் நடைபெறும்.
இதனை முன்னிட்டதான பெருவிழாவின் மேளதாளங்கள் நடன நிகழ்வுகளுடன் கலசம் தாங்கிய இரு யானைகள் ஊர்வலம் நேற்றும் இன்றும் இடம்பெற்றது.
பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான ஊர்வலமானது பிரதான வீதிகளினூடாக அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தை அடைந்து அங்கிருந்து பெரிய பி;ள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.
ஆலய தலைவர் மு.வடிவேல் மற்றும் ஆலயக்கும்பாபிசேக குழுத் தலைவர் எஸ்.புண்ணியமூர்த்தி ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ள கும்பாபிசேக குடமுழுக்கினை தத்புருஷ சிவாச்சாரியார் பிரதிஷ்டா கலாநிதி சண்முகவசந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைக்கவுள்ளனர்.
மேற்படி ஆலயமானது சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் சோழர்காலத்தில் அரசபிரதானிகளால் கருங்கற்திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு பண்ணப்பட்டது.
1611 களில் போர்த்துக்கேயரால் தரைமட்டமாக இடிக்கப்பட்டது
கண்டி இராசதானியின் போது மீண்டும் 5 மண்டபங்கள் கொண்ட ஆலயமாக கட்டப்பட்டது
1640 களில் மாணிக்கப்போடியார் காலத்தில்
இவ்வாலயம் இடிக்கப்பட்டு மீண்டும் 1964 புதிய ஆலயம் அமைக்கப்பட்டது. அந்த வகையில் , போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் 25வது மகாகும்பாபிஷேகம் ஆகும்.
மேலும் இவ்வாலயம் அரசபிரதானிகளால் குருக்கள் மானியம் பெற்ற சிறப்புக்கொண்டது
தற்போது பண்டைய கருங்கற் கோயிலின் தொல்பொருட்கள் கற்தூண்கள் கபோதகம் எழுதகம் அரைப்புக்கற்கள் நிலைக்கற்கள் ஆதிக்கோயிலின் அத்திவாரம் என்பன தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.