முறையற்ற பந்து வீச்சுக் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவுக்கு ஓராண்டு காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரை சர்வதேச போட்டிகளில் பந்து வீச முடியாது எனவும் ஐ.சி.சி. சுட்டிக்காட்டியுள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் 18 ஆம் திகதி காலி மைதானத்தில் நிறைவுக்குவந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி சந்தேகமானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்றிலிருந்து 14 நாட்களுக்குள் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி தொடர்பில் பரிசோதனை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த 28 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு பரிசோதனை நடவடிக்கைகளில் மேற்கொண்டிருந்தார்.
இந் நிலையில் குறித்த பரிசோதனை முடிவு தொடர்பான அறிக்கையில் அகில தனஞ்சயவின் பந்து வீச்சானது முறையற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.