ம.கிரிசாந்
ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் ஆலையடிவேம்பு பிரதேச வீடுகளில் திண்மக்கழிவகற்றல் செயற்பாடானது நாளைமுதல் புதிய நடைமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
பிரதேச வீடுகளில் பெற்றுக்கொள்ளப்படும் திண்மக்கழிவுகளில் உக்கக்கூடிய கழிவுகளை மாத்திரம் நாளை (17) முதல் பெற்றுக்கொள்ள உள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
மக்கள் திண்மக்கழிவுகள் வழங்கும் போது உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து உக்கக்கூடிய கழிவுகளை மாத்திரம் வழங்குமாறும் மேலும் வாழைமரத்தண்டுகள் போன்ற உக்கக்கூடிய திண்மக்கழிவு பொருட்கள் வழங்கும் போது சிறு சிறு துண்டங்களாக்கி வழங்குமாறும் அறிவுறுத்தி உள்ளார்கள்.
பிரதேச சபையினரின் இந்த திண்மக்கழிவகற்றல் புதிய நடைமுறை அறிவிப்பானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
திண்மக்கழிவுகளில் உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து உக்கக்கூடிய கழிவுகளை மாத்திரம் இவர்கள் பெற்றுக்கொண்டால் உக்காத கழிவுகளை நாங்கள் என்ன செய்வது எவ்வாறு அப்புறப்படுத்துவது.
ஏனைய பிரதேச சபையினர் உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து இரண்டையும் பெற்றுக்கொள்கின்றனர்.
இவர்கள் இவ்வாறு ஒரு பகுதி கழிவுகளை மாத்திரம் பெற்றுக்கொண்டால் எங்கள் நிலை என்ன?
மேலும் உக்காத கழிவுகளை எவ்வாறு மக்கள் ஆகிய நாங்கள் கையாண்டு இல்லாமல் ஒழிப்பது என்பது தொடர்வான எந்த விளக்கங்களும் அறிவுறுத்தல்களும் வழங்காமல் இவ்வாறு திடீரென நாளை முதல் என ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் அறிவிப்பது மேலும் பிரதேசசபை மீதுள்ள நம்பிக்கையை இழக்க செய்கின்றது என மக்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றனர்.