வி.சுகிர்தகுமார்
கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக தொழிலை இழந்த பல குடும்பங்களின் குழந்தைகள் நலன் கருதி பால்மா பைக்கற்றுக்ளை வழங்கும் பணியினை அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பு முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் 70 குழந்தைகளுக்கான பால்மா பைக்கற்றுக்களை வழங்கி வைத்தனர்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சில குடும்பங்கள் தங்களது குழந்தைகளுக்கான பால்மா பைக்கற்றுக்களை பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இதனை கருத்தில் கொண்ட அன்புக்கரங்கள் அமைப்பு இப்பணியை முன்னெடுப்பதற்கான முயற்சியினை மேற்கொண்டது. இதன் பயனாக அக்கரைப்பற்றை சேர்ந்தவரும் அவுஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் ஒருவரும் அக்கரைப்பற்றை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவரும் சுவிஸ் நாட்டை சேர்ந்த மு.அனுதாஸ் ஆகியோரும் முன்வந்து பால்மா பைக்கற்றுக்களை பெறுவதற்கான நிதியை வழங்கினர்.
இதன் மூலம் பெறப்பட்ட பால்மா பைக்கற்றுக்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் அன்புக்கரங்கள் அமைப்பின் நிருவாகத்தினர் கலந்து கொண்டு பால்மா பைக்கற்றுக்களை வழங்கி வைத்தனர்.