வி.சுகிர்தகுமார்
அச்சிறப்பு மிக சிவனுக்கே உகந்த மகாசிவராத்திரி விரதம் உலகளாவிய ரீதியில் இந்துப்பெருமக்களால் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை இரவு அனுஸ்டிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்திலும் இவ்விரதம் அனுஸ்டிக்கப்பட்டது.
நான்கு ஜாம விசேட பூஜைகள் மற்றும் பக்தி சிரத்தையுடன் விரதமிருக்கும் அடியார்கள் கரங்களால் சிவலிங்கப் பெருமானுக்கான பாலாபிசேகம், தீர்த்தபிசேகம் செய்யும் வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றது.
பாசுபதேசுவரர் ஆலயத்தின் தலைவர் மா.ரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற வழிபாட்டு கிரியைகளை வித்தியாசகாரர் சிவஸ்ரீ பி.புண்யகிருஸ்ணகுமாரக் குருக்கள் தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைத்தனர்.
இதேவேளை விரதமிருக்கும் அடியார்களின் கண்விழிப்பிற்காக கருங்கொடியூர் உறை ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் உள்ளிட்ட ஆலயங்களில் பஜனை, சமய சொற்பொழிவுகள், கலாசார நிகழ்வுகளும் இரவு முழுவதுமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.