பிடிக்காத திருமணத்திற்குப் பயந்து சாமியாராகிப் போனவர்களை நாம் நிஜ வாழ்விலும் கதைகளிலும் சினிமாக்களிலும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் சீனாவில் விநோத பயம் ஆட்கொள்ள, திருமணத்தை வெறுத்து சிறையே பரவாயில்லை என்று திருட்டில் ஈடுபட்டு ஒருவர் சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடிவிட்டு இளைஞன் சிறைக்குச் சென்றுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த இளைஞர் சென் என்பவர் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு குறித்த பெண் ஜென்னிடம் அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். அதற்கு சென் மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும் காதலி விடுவதாக இல்லை.
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாத சென், அருகில் இருந்த நடன ஸ்டூடியோவுக்குச் சென்று அங்கிருந்த மதிப்புள்ள ஒலிபெருக்கியைத் திருடியுள்ளார்.
இதையடுத்து திருடிய குற்றச்சாட்டில் அவரைப் பொலிஸார் கைது செய்தனர். மகிழ்ச்சியாக கைதான சென், காதலியிடம் இருந்து தப்பிக்க வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நிச்சயம் பொலிஸார் தன்னைக் கைதுசெய்து விடுவார்கள் என்று தெரியும் எனவும் சிரித்துக் கொண்டே அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இவரது திட்டம் பலித்ததா? காதலி இவரைப் பிரிந்து சென்றாரா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இது சமூக வலைத்தளவாசிகளை ஈர்க்க பலரும் நகைச்சுவையாக கருத்துக்களைப் பதிவிட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.