இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில், ஜோ ரூட் 67 ஓட்டங்களுடனும் ஜோனி பேயர்ஸ்டொவ் 24 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 283 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.
காலி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 381 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் 110 ஓட்டங்களையும் டிக்வெல்ல 92 ஓட்டங்களையும் தில்ருவான் பெரேரா 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 6 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது ஸெக் க்ரெவ்லி 5 ஓட்டங்களுடனும் டோமினிக் சிப்ளி ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுளை வீழ்த்தினார்.
இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி, போட்டியின் மூன்றாவது நாளுக்காக, நாளை துடுப்பெடுத்தாடவுள்ளது.