Latest News
Home / இலங்கை / 10 தமிழ் கட்சிகள் மீண்டும் சந்திப்பு – கூட்டு நாடுகளின் பிரேரணை வரைபு குறித்து ஆராய்வு

10 தமிழ் கட்சிகள் மீண்டும் சந்திப்பு – கூட்டு நாடுகளின் பிரேரணை வரைபு குறித்து ஆராய்வு

தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் 10 தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மீண்டும் ஒன்று கூடவுள்ளன.

இதன்போது ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளின் பிரேரணை வரைபு குறித்து ஆராயப்படவுள்ளது.

அத்தோடு, தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகள் இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணையொன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்டிருந்தது.

கனடா, ஜேர்மனி, வடமசெடொனியா, மலாவி, மொன்டினீக்ரோ, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த அறிக்கையினை வெளியிட்டிருந்தன.

இதில் போர் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை திரட்டுதல் ஆய்வு செய்தல் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி எதிர்கால விசாரணைக்கான முதற்கட்ட நடவடிக்கையாக அவற்றை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கையை இந்த மாதம் ஜெனீவா அமர்வில் ஆராயவுள்ளதாக இலங்கை தொடர்பிலான கூட்டு நாடுகள் தெரிவித்துள்ளன.

மனித உரிமை பேரவைக்கு தயார் செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை தொடர்பிலான கூட்டு நாடுகள், மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளன.

குறித்த பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், அந்தப் பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *