வி.சுகிர்தகுமார்
புதிய அரசு ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் சமுர்த்தி வேலைத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களும் அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி கோத்தபாய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சமுர்த்தி வங்கிகளையும் நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக சமுர்த்தி அமைச்சர் செகான் சேமசிங்கவின் உத்தரவிற்கமைய பணிப்பாளர் பந்துல திலகசிறியின் ஆலோசனையின் பிரகாரம் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி வங்கிச்சங்கங்களை கணிணி மயப்படுத்தும் திட்டத்திற்கமைய வங்கி முகாமையாளர்கள் மற்றும் வங்கிச்சங்க முகாமைத்துவ பணிப்பாளர்கள் உதவி முகாமையாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக வடகிழக்கில் உள்ள வங்கிச்சங்க முகாமைத்துவ பணிப்பாளர்கள் உதவி முகாமையாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி நெறி திருகோணமலை நிலாவெளி சமுர்த்தி பயிற்சி நிலையத்தில் 06 ஆம் திகதி நடாத்தப்பட்டது.
குறித்த கணிணி மயப்படுத்தலுக்கான பயிற்சி நெறியை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் கணிணி மயப்படுத்தலுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள த.பவளேந்திரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்தி வைத்தனர்.
இதன்போது கணிணி மயப்படுத்தலுக்கான பல்வேறு விளக்கங்களும் வளவாளர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களின் கேள்விகளுக்கும் விடையளிக்கப்பட்டன.
மேலும் இம்மாத இறுதிக்குள் சமுர்த்தி வங்கிச்சங்க தகவல்கள் யாவும் கணிணி மயப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட எதிர்பார்க்கப்படுவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.