லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து அப்ரிடி தற்காலிகமாக விலகல்!

சொந்த காரணங்களுக்காக லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து விலகி, சயிட் அப்ரிடி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் விரைவில் திரும்பி மீண்டும் எல்பிஎல் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து அப்ரிடி மீண்டும் இலங்கைக்குத் திரும்பினால் வழக்கமான முறையில் ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட மாட்டார் எனத் தெரிகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் அப்ரிடி ஏற்கெனவே பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார் என அறியப்படுகிறது.

கடந்த நவம்பர் 24ஆம் திகதி இலங்கைக்கு வந்த அப்ரிடி, நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

சயிட் அப்ரிடி தலைமையிலான காலி கிளேடியேட்டர்ஸ் அணி, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.