கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் வகையில் பொதுமக்களை தெளிவூட்டும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற மீற்றரில் வாழ்க்கை செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
பேருந்துகளிலும் மக்கள் நடமாடும் பொது இடங்களிலும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலான ஆலோசனைகள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய கிழக்கு மாகாணத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.
பொலிஸ் திணைக்களம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஐ.வாஹித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஆலீதின் ஹமீன் உட்பட பொலிஸ் அதிகாரிகள், இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் மற்றும் இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளிலும் பொது இடங்களிலும் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
கொரோனா வைரஸுடன் புதிய வாழ்க்கை முறையொன்றை வாழ்வதற்கு மக்களை இலகுபடுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.